முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Alagar - Dasavatharam-2024-04-25

மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது. அதை தொடர்ந்து ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, இன்று அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். 

மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 23-ம் தேதி நடந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

அதை தொடர்ந்து மேள, தாளம் முழங்க மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு கள்ளழகர் கிளம்பினார். நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. விடிய, விடிய நடந்த இந்த நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட அவதாரங்களில் அழகர் காட்சி தந்தார். 

அழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். நேற்று அதிகாலை 6 மணி அளவில் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் வீதி உலா வந்தார். அதை தொடர்ந்து பகல் 2 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் எழுந்தருளிய கள்ளழகர்  இரவு 11 மணி அளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு கள்ளர் கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிகிறார். 

அதே கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனவுடன் அங்கிருந்து அழகர் மலை நோக்கி புறப்படுகிறார். மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 27-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.32 மணி அளவில் தனது இருப்பிடம் சென்று அடைகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து