முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Srirangam-Chitrai--Festival

திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 

இதையொட்டி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். 

பின்னர் காலை 5.30 மணிமுதல் காலை 6.15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பேரிதாடனம் நடைபெறுகிறது.

பின்னர் மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைந்தார். 

அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று  29-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். விழாவின் இரண்டாம் நாளான இன்று (29-ம் தேதி) மாலை கற்பகவிருஷ வாகனத்திலும், 30-ம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 1-ம் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 2-ம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ம் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார்.

தொடர்ந்து 4-ம் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ம் தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ம் தேதி நடைபெறுகிறது. 7-ம் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. 8-ம் தேதி ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்திருவிழா நிறைவடைகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து