முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தல்: 10 மாநிலங்களில் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம் : இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் மும்மூரம்

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      இந்தியா
Election 2024-03-29

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற  4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. வரும் திங்கட் கிழமை  (13-ம் தேதி) 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

3 கட்ட தேர்தல்...

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ம்  தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ம் தேதி 89 தொகுதிகளுக்கும் முதல் 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன் 95 தொகுதிகளில் 3-வது கட்டத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் 66 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ஏற்பாடுகள் தீவிரம்...

இந்த நிலையில் 4-வது கட்டத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

ஒரேகட்டமாக...

இந்த 96 தொகுதிகள், ஆந்திரா (25), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), மத்தியபிரதேசம் (8), மராட்டியம் (11), ஒடிசா (4), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (8), காஷ்மீர் (1) ஆகிய 10 மாநிலங்களில் இடம்பெற்று உள்ளன. இதில் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளுக்கும் வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளுக்கும் அன்றைய தினம் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

கடந்த 12 நாட்கள்...

4-வது கட்டத் தேர்த லுக்கான 96 தொகுதிகளிலும் கடந்த மாதம் 29-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு கடந்த 12 நாட்களாக பிரசாரம் தீவிரமானது. தேர்தல் பிரசாரம் நேற்றோடு நிறைவு பெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மும்மூரமாக ஈடுபட்டனர். இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் 96 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்கிறது.

ஆந்திரா - தெலங்கானா...

முன்னதாக நேற்று 96 தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் இருந்தது. குறிப்பாக ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் தேர்தல் பிரசாரம் மிகமிக தீவிரமாக இருந்தது.

சட்டசபை தேர்தல்...

ஆந்திராவில் சட்டசபை தேர்தலுடன் பாராளுமன்றத்துக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்பட இருப்பதால் அங்கு, தேர்தல் பிரசாரம் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு ஆட்சியை கைப்பற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஒடிசா சட்டசபைக்கு...

ஒடிசாவிலும் சட்டசபைத் தேர்தலுடன் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அங்கு அசைக்க முடியாத செல்வாக்குடன் இருக்கும் முதல்வர் நவீன் பட்நாயக் மீண்டும் ஆட்சியமைக்கும் வகையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஒடிசாவில் பாரதீய ஜனதாவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது.

பிரதமர் மோடி - ராகுல்...

மராட்டியம், உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. இந்த மாநிலங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் போட்டி போட்டு பிரசாரத்தை மேற்கொண்டனர். 

காங்கிரஸ் கடும் சவால்...

கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இந்த 96 தொகுதிகளிலும் அதிக இடங்களை பாஜ.க. கைப்பற்றி இருந்தது. இந்த தடவை காங்கிரஸ் கூட்டணி கடுமையான சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக 4-வது கட்டத் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க.  மற்றும் இன்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள்  இடையே கடும் போட்டி நிலவுகிறது. திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடைபெறும் நிலையில் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடைபெறும் 96 தொகுதிகள்:

1) ஆந்திரா  - 25 - தொகுதிகள் - (ஒரே கட்டமாக...).

2) பீகார் - 5  - தொகுதிகள். - (4-வது கட்டம்).

3), ஜார்க்கண்ட் 4  - தொகுதிகள். (முதல் கட்டம்).

4) மத்தியபிரதேசம் - 8  - தொகுதிகள். (4-வது கட்டம்).

5) மகாராஷ்டிரா - 11  - தொகுதிகள். (4-வது கட்டம்).

6) ஒடிசா - 4 -  தொகுதிகள். (முதல் கட்டம்).

7) தெலுங்கானா - 17  - தொகுதிகள். (ஒரே கட்டமாக...)

8) உத்தரபிரதேசம் - 13 -  தொகுதிகள். (4-வது கட்டம்).

9) மேற்கு வங்காளம் - 8  - தொகுதிகள். (4-வது கட்டம்).

10)  காஷ்மீர் - 1  - தொகுதி. (4-வது கட்டம்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து